செய்திகள் (Tamil News)
குடவாசல் அருகே முதியவருக்கு கத்திக்குத்து
குடவாசல் அருகே முதியவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது60). அதே ஊரை சேர்ந்தவர் வீரையன்(55). இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள். சம்பவத்தன்று 2 பேரும் மதுஅருந்தி விட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த விக்னேஷ்(28), மகாலிங்கத்திடம் ஏன் வீரையனுடன் சண்டை போடுகிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தான் வைத்திருந்த கத்தியால் மகாலிங்கத்தை குத்தினார்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகாலிங்கத்தின் மகன் வினோத் கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், வீரையன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.