செய்திகள் (Tamil News)
தற்கொலை

திருச்சியில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

Published On 2021-01-08 10:29 GMT   |   Update On 2021-01-08 10:29 GMT
திருச்சியில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பங்கு சந்தை வீழ்ச்சியால் மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:

திருச்சி பீமநகர் கூனிபஜாரை சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மகன் ஹாரூன்பா‌ஷா(வயது 23). இவர், வீடுகளில் எல்.இ.டி. தொலைக்காட்சிகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக சரியான வேலை எதுவும் இன்றி வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பலரிடம் கடன் பெற்று அதை திரும்ப கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

மேலும் இளம்பெண் ஒருவரை, ஹாரூன்பா‌ஷா காதலித்து வந்துள்ளார். தற்போது, அவருக்கு சரியான வேலை இல்லை என்பதால் காதலியும் பேசுவதை தவிர்த்து கொண்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லை ஒருபுறம், காதல் தோல்வி மற்றொரு புறம் என தவித்த ஹரூன்பா‌ஷா மிகுந்த மனவேதனையில் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத வேளையில், மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின்பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் விரைந்து சென்று ஹாரூன்பா‌ஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பங்கு சந்தை வீழ்ச்சியால் மற்றொருவர் உயிரிழப்பு

திருச்சி திருவானைக்காவல் தெற்கு உள்வீதியை சேர்ந்தவர் கனகசபை(39). பங்கு சந்தையில் கனகசபை, அதிக அளவிலான பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது, கொரோனா காலக்கட்டத்தில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்ததால், அவர் முதலீடு செய்த தொகை ந‌‌ஷ்டமானது.

இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீசார் விரைந்து சென்று, கனகசபை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News