செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

கோவையில் பரிதாபம் : தடுப்பூசி போட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு

Published On 2021-02-18 22:57 GMT   |   Update On 2021-02-18 22:57 GMT
கோவையில் தடுப்பூசி போட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.
கோவை:

கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 24). இவர்களுக்கு கிஷாந்த் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் விஜயலட்சுமி தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் காலை மசக்காளிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்றார்.

அங்கு பணிபுரியும் நர்சு ஒருவர், குழந்தைக்கு தடுப்பூசி போட்டார். அதன்பின்னர் விஜயலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பினார்.

வீட்டுக்கு வந்தபிறகு குழந்தை அழுதபடியே இருந்தது. சிறிது நேரம் கழித்து குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை உடனடியாக உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர். அங்குள்ள டாக்டர்கள் குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும்படி கூறினார்கள்.

பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை எடுத்துச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து விஜயலட்சுமி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை இறந்ததாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தை நிமோனியா காய்ச்சல் காரணமாக இறந்ததும், தடுப்பூசி போட்டதால் இறக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையில் இதேபோல தடுப்பூசி போட்ட மற்றொரு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு வெற்றிமாறன் என்ற 2½ மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு நேற்று முன்தினம் மசக்காளிபாளையம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் மாலையில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தது. பின்னர் இரவில் தூங்கிய குழந்தை காலையில் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் தடுப்பூசி போட்ட 2 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News