பர்கூர்- பென்னாகரத்தில் ரூ.6 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
பர்கூர்:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட தொகரப்பள்ளி துணை மின் நிலையம் அருகே தேர்தல் பணிக்குழு உதவி பொறியாளர் கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஏட்டுகள் மகேந்திரன் சுமதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவர் வேனில் ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் பணம் ஆவணம் இன்றி எடுத்துச் சென்றுள்ளார்.
இதை தேர்தல் பணிக்குழு உதவி பொறியாளர் கோவிந்தராஜ் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பர்கூர் தாசில்தார் சண்முகம், போச்சம்பள்ளி தாசில்தார் குமரவேலிடம் ரூ.4 லட்சம் 94 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தனர். இதனால் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பழையூர் சோதனைச்சாவடியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சக்தி, சப்- இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக காரில் சேகர் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 820 வைத்திருந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு பென்னாகரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.