கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட கோவை-சென்னை சதாப்தி ரெயில் 5-ந் தேதி முதல் மீண்டும் இயக்கம்
கோவை:
கோவை- சென்னை சதாப்தி ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட சென்னை- கோவை சதாப்தி சிறப்பு ரெயில் மற்றும் கோவை- சென்னை சதாப்தி சிறப்பு ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
இதேபோல கேரள மாநிலம் கொச்சுவேலி- கர்நாடக மாநிலம், பானஸ்வாடி சிறப்பு ரெயில் வருகிற 8-ந் தேதி முதலும், பானஸ்வாடி- கொச்சுவேலி சிறப்பு ரெயில் 9-ந் தேதி முதலும் மீண்டும் இயக்கப்படுகிறது.
மேற்குவங்கம், ஹவுராவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் நாளை முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரையும், எர்ணாகுளம் -ஹவுரா வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் செப்டம்பர் 27-ந் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலம் பவுரனியில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எர்ணாகுளம்- பவுரனி வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மற்றும் கொச்சுவேலி -கோரக்பூர் சிறப்பு ரெயில் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.