செய்திகள் (Tamil News)
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
திண்டுக்கல்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டம் திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்கினார்.
இதில் மாநில இணை செயலாளர் விஜயகர்ணபாண்டியன், மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மண்டல தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் கந்தசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது 15 அம்ச கோரிக்கைகளை குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்றும்படி முதல்-அமைச்சருக்கு 2 ஆயிரத்து 493 கடிதங்களை அனுப்பினர்.
அந்த கடிதத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் தற்காலிக சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை இளநிலை உதவியாளர் பணியிடத்தில் நியமிக்க வேண்டும். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊரக வளர்ச்சி பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டு இருந்தன.