செய்திகள்
கைது

மேலூரில் அரசு பஸ் கூரை மீது ஏறி ரகளை செய்தவர் கைது

Published On 2021-11-06 08:33 GMT   |   Update On 2021-11-06 08:33 GMT
மேலூரில் அரசு பஸ் கூரை மீது ஏறி ரகளை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் பஸ் நிலையத்திற்கு சிங்கம்புணரியில் இருந்து அரசு டவுன் பஸ் வந்தது. இந்த பஸ் செக்கடி பஜாரில் நின்ற போது சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் அந்தப் பஸ்சின் கூரையின் மீது ஏறி உள்ளார். பஸ் அங்கிருந்து புறப்பட்டதும் அவர் மேற்கூரையில் ஓடியதால் பதட்டம் ஏற்பட்டது.

உடனடியாக பஸ்சை நிறுத்த டிரைவர் முயன்றார். அப்போது அந்த வாலிபர் முன்பக்க கண்ணாடி வழியாக ஓடும் பஸ்சில் இருந்து குதித்தார். அதற்குள் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் மது போதையில் இருந்தது தெரியவர போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News