செய்திகள் (Tamil News)
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி வரத்து குறைவு
கடந்த வாரம் 341 குவிண்டால் வரத்து இருந்த நிலையில் குவிண்டால் ரூ. 7, 450க்கு விற்பனையானது.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 105 விவசாயிகள் தங்களுடைய 588 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.
மொத்த வரத்து 195 குவிண்டால். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 9 வணிகர்கள் வந்திருந்தனர். விலை குவிண்டால் ரூ. 6,250 முதல் ரூ.8,699 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,300.
ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ. 14 லட்சத்து 13 ஆயிரத்து 984.
கடந்த வாரம் 341 குவிண்டால் வரத்து இருந்த நிலையில் குவிண்டால் ரூ. 7,450க்கு விற்பனையானது. ஏல ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளர் பாலசந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.