செய்திகள்
கைது

வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது

Published On 2021-11-19 12:09 GMT   |   Update On 2021-11-19 12:09 GMT
வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி:

சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் குன்றத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். சம்பந்தப்பட்ட நபரின் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்குவதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ்க்கு ரூ.25 ஆயிரமும், தனக்கு ரூ.10 ஆயிரமும் லஞ்சமாக தர வேண்டும் என பேரூராட்சி கிளார்க் செல்வராஜ் கேட்டதாக தெரிகிறது.

தான் தொடர்ந்து அலக்கழிக்கப்பட்டதால் இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை - 3 பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினார்கள். பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலம் அருகே வைத்து பேரூராட்சி கிளார்க் செல்வராஜ் பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரை கைது செய்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செங்கல்பட்டு அடுத்த கருங்குழியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News