உள்ளூர் செய்திகள் (District)
காயமடைந்த வாலிபர்.

சரக்கு ரெயில் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம்

Published On 2022-01-27 10:26 GMT   |   Update On 2022-01-27 10:26 GMT
ஜோலார்பேட்டையில் சரக்கு ரெயில் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 31 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சரக்கு ரெயில் மீது ஏறினார். 

அப்போது மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் மின்சாரம் தாக்கி வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவர் சுயநினைவின்றி கிடந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை மேற்கொண்டதில் அவர் பீகார் மாநிலம் பர்கத் மாவட்டம் ஜமுலர்தா பகுதியை சேர்ந்த இவரின் பதான் என்பவரின் மகன் சுதன் (வயது31) என்பது தெரியவந்தது.

அவர் சினிமாவில் சண்டை காட்சியில் நடிப்பதற்கு சரக்கு ரெயில் மீது ஏறி குதித்து ஒத்திகை பார்த்ததாகவும், சினிமாவில் நடிப்பதாகவும் கூறியதாக போலீசாரிடம் தெரிவித்தார். 

உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி உடலில் தோல் சிதைந்து படுகாயமடைந்துள்ளதால் அவர் சுயநினைவின்றி கூறி வருகிறாரா? என்பது குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர் நேற்று மாலை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News