உள்ளூர் செய்திகள் (District)
கலவை அருகே சாலையில் பாலை ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காடு:
ஆற்காடு கலவை அடுத்த பென்னகர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்படுகிறது.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த ரகு, அங்குள்ளஆதிதிராவிடர் குடியிருப்பில் கடந்த 30 ஆண்டுகளாக பாலைக் கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் புதிதாக மகளிர் ஆதிதிராவிடர் பால் கூட்டுறவுச் சங்கம் என்ற பெயரில் மற்றொரு தரப்பினர் பால் கொள்முதல் செய் வருகின்றனர்.
இதனால், கடந்த ஒரு மாதமாக அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த 15--க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் ரகு வசிக்கும் இடத்துக்கே சென்று பால் ஊற்றி வந்தனர்.
இதனால், பால் உற்பத்தியாளர்கள் புதிதாக உருவான பால் கொள்முதல் சங்கத்தைக் கண்டித்து கலவை -வாழைப்பந்தல் சாலையில் பாலை நடுரோட்டில் ஊற்றி மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தரப்பையும் அழைத்துப் பேசி, யாருக்கு பால் ஊற்ற விருப்பமோ, அவரவர்களிடமே பாலை ஊற்றிக் கொள்ளலாம், யாரையும் நிர்பந்தம் செய்யக் கூடாது என்று புதிதாக உருவான சங்கத் பொறுப்பாளர்களிடம் எழுதி கையொப்பம் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.