தமிழ்நாடு (Tamil Nadu)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் கோவை வருகை

Published On 2024-10-23 09:23 GMT   |   Update On 2024-10-23 09:23 GMT
  • நூலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
  • விழாக்கள் நவம்பர் 4-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கோவை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில் அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்யப்போவதாக அறிவித்தார்.

அதன்படி முதல் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் கோவை வருகிறார். காந்திபுரத்தில் 6.9 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடியில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

முன்னதாக விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது ஐ.டி. பார்க் வளாகத்தை திறந்து வைக்கிறார். பீளமேடு பகுதியில் ஏற்கனவே ஐ.டி. பார்க் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக பொதுப்பணித்துறை மூலம் கோவை விளாங்குறிச்சி தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் இந்த புதிய ஐ.டி. பார்க் கட்டப்பட்டது. இதை முதலமைச்சர் திறந்துவைத்து ஐ.டி. பொறியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாக்கள் நவம்பர் 4-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் கோவை வருவது உறுதியாகிஉள்ளது. ஆனால் விழா 4-ந் தேதி நடைபெறுமா, தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை. காரணம் 4-ந் தேதி என்பது தீபாவளி விடுமுறைக்கு பிறகு வரும் முதல் வேலைநாளாக ஆகும். இதனால் முதலமைச்சர் வருகை தேதி முறைப்படி அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News