உள்ளூர் செய்திகள் (District)
5-ம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது
மாவட்டத்தில் மொத்தம் தகுதியான 4 லட்சத்து 8,600 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி தொடங்கியது. டாக்டர், செவிலியர், போலீசார் உட்பட முன்கள பணியாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 60 வயதை கடந்த 2 தவணை தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் அல்லது 9 மாதம் கடந்தவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மொத்தம் தகுதியான 4 லட்சத்து 8,600 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 4 பூஸ்டர் மற்றும் மெகா தடுப்பூசி முகாமில், 8,653 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (17-ந் தேதி) 5-ம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் 77 மையங்களில் நடக்கிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்:
‘பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தகுதியான நபர்களாக இருப்பவர்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு இவர்களுக்கு அனுப்பியது போல், பூஸ்டர் தடுப்பூசிக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றனர்.