உள்ளூர் செய்திகள் (District)
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள்- அரசு அறிவிப்பு
மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம், மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களையும், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைமை உள்ளுறை ஆணையர் மற்றும் உள்ளுறை ஆணையர் அவர்களை தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு அருகில் உள்ள தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அவர்களின் விபரத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண். 1070.
ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம்- 9445869848, 9600023645, 9940256444, 044-28515288.
உக்ரைன் அவசர உதவி மையம், தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுடெல்லி - வாட்ஸ்அப் எண் 9289516716.
மின்னஞ்சல் – ukrainetamils@gmail.com