உள்ளூர் செய்திகள் (District)
பருப்பு வகைகள்

சென்னையில் மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு

Published On 2022-03-23 07:33 GMT   |   Update On 2022-03-23 07:33 GMT
சோம்பு, பட்டை, லவங்கம், தனியா போன்ற மளிகை பொருட்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயருகிறது.
சென்னை:

நாடு முழுவதும் அதிக மழை பெய்ததின் காரணமாக மளிகை பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஆண்டு உற்பத்தி குறைவாக உள்ள உணவுப் பொருட்களின் விலையும் தற்போது கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

தமிழகத்துக்கு குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் அதிக அளவில் வருகின்றன. கடும் மழை காரணமாக பருப்பு விளைச்சலால் பாதிக்கப்பட்டதால் அதன் விலை தற்போதே உயர்ந்து பதற வைக்கிறது.

ஒரு கிலோ பாசிபருப்பு தற்போது கிலோ ரூ.98-ல் இருந்து ரூ.105 ஆக விலை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு ரூ.93-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அனைத்து மளிகை பொருட்கள் விலையும் அடுத்த மாதம் முதல் கடுமையாக உயருகிறது. உளுத்தம்பருப்பு கிலோ ரூ.90-ல் இருந்து ரூ.100 ஆக உயர வாய்ப்பு உள்ளது. வெள்ளை கொண்டை கடலை ரூ.98-ல் இருந்து ரூ.105 ஆகவும், மிளகாய் ரூ.200-ல் இருந்து ரூ.240 ஆகவும், குண்டுமிளகாய் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும் விலை உயர வாய்ப்பு உள்ளது.

கடுகு ரூ.77-ல் இருந்து ரூ.80 ஆகவும், சீரகம் ரூ.230-ல் இருந்து ரூ.250 ஆகவும், மிளகு ரூ.535-ல் இருந்து ரூ.540 ஆகவும் விலை உயருகிறது. புளி ரூ.80-ல் இருந்து ரூ.150 ஆகவும், ஏலக்காய் ரூ.1150-ல் இருந்து ரூ.1200 ஆகவும் விலை உயரும் அபாயம் காணப்படுகிறது.

இதுதவிர சோம்பு, பட்டை, லவங்கம், தனியா போன்ற மளிகை பொருட்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயருகிறது. மேலும் சோப்பு விலையும் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே பிஸ்கட், நூடுல்ஸ், டீத்தூள் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மொத்த விற்பனையில் மளிகை பொருட்களின் விலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. சில்லரை விலையை பொருத்தவரை மளிகை பொருட்களின் விலை இன்னும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News