உள்ளூர் செய்திகள்
வள்ளிதெய்வானை சமேத ஆறுமுக கடவுள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2022-04-08 09:48 GMT   |   Update On 2022-04-08 09:48 GMT
பிராந்தகம் முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள 34 1/2 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள் கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் கலசபூஜை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி புனித தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். 

மாலை கோ பூஜையும், 108 குத்துவிளக்கு பூஜையும், இரவு ஆன்மீக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் யாக வேள்வியும் மற்றும் 108 கலச பூஜையும் நடைபெற்றது. 

காலை 11 மணிக்கு மேல் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக கடவுளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 12 மணிக்கு மேல் மணி சாமிகளுக்கு குரு பூஜை விழாவும் நடைபெற்றது. 

விழாவையொட்டி வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகக்கடவுள் மற்றும் மணி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பிராந்தகம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை பிராந்தகம் ஆறுமுகக் கடவுள் கோயில் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் பிராந்தக காவடி குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News