உள்ளூர் செய்திகள் (District)
விபத்துக்குள்ளான வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி உள்ளதை படத்தில் காணலாம்.

டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது மோதிய வேன்- தொழிலாளி பலி

Published On 2022-06-03 06:02 GMT   |   Update On 2022-06-03 06:02 GMT
தூத்துக்குடியில் நள்ளிரவில் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி:

நெல்லை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் நேற்று இரவு தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு சென்றது.

வேனை நெல்லை பண்டாரகுளத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டிச்சென்றார். இரவு 10 மணியளவில் வேன் தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில் நெல்லை படையாச்சி தெருவை சேர்ந்த தொழிலாளி முத்துக்குமார் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

வேன் டிரைவர் ராமச்சந்திரனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் வேனில் சென்ற தொழிலாளர்களான நெல்லை திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த ராமலட்சுமி (23), வெங்கடேஸ்வரி (22), வல்லநாட்டை சேர்ந்த ரமேஷ் (21), மணக்காடு பகுதியை சேர்ந்த கோமதி (28), துரைச்சி (27), திரேகா (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் உயிரிழந்த முத்துக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News