தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் 4 ரவுடிகள் கைது
- முகமது ஆரோன் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு மது போதையில் கும்பலாக வந்த 5 வாலிபர்கள் முகமது ஆரோனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முகமது ஆரோன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மது போதையில் கும்பலாக வந்த 5 வாலிபர்கள் முகமது ஆரோனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை கைகளால் தாக்கி விட்டு மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டினர். இதில் தலை, காது உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த முகமது ஆரோன் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய கருப்பசாமி (25), செல்வகணேஷ் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 வாலிபர்களை பிடிப்பதற்காக தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியை சேர்ந்த மனீஸ்வரன்(20), மகாராஜன்(22) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ரவுடிகள் பட்டியலில் இவர்கள் பெயர் இருப்ப தாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.