கோவையில் 9-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்
- மாணவி தன்னை யாரும் தேட வேண்டாம் கடிதம் எழுதி விட்டு மாயமானார்.
- பெற்றோர் சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
நெகமம்,
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. மாலையில் பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் மாணவி இல்லை.இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் மாணவியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், மாணவி தன்னை யாரும் தேட வேண்டாம். நான் நன்றாக படிப்பேன். நன்றாகவே இருப்பேன்.
என்னை காணவில்லை என கூறி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டாம் என எழுதி இருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர் போனை எடுக்கவில்லை. திரும்ப, திரும்ப அழைத்தும் எடுக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் சம்பவம் குறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தந்தை அவரை கண்டித்ததாகவும், இதனால் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவி உசிலம்பட்டி தான் சென்றிருக்கிறாரா? அல்லது வேறு எங்காவது சென்றிருக்கிறாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.