சிறுமுகையில் காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம்
- உலியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.
- சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சர கத்திற்குட்பட்ட உலியூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(58). விவசாயி.
இவர் உலியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.
அப்போது வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை திடீரென ராதாகிருஷ்ணனை தாக்க முயற்சித்தது. யானை வருவதை பார்த்ததும் ராதாகிருஷ்ணன் திடீரென அங்கிருந்து அலறி அடித்து ஓடினார்.
ஆனாலும் காட்டு யானை இவரை விடாமல் துரத்தி வந்து தூக்கி வீசியது. இதில் ராதாகிருஷ்ணனின் நெஞ்சு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை விரட்டிய பின் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.