திட்டக்குடி அருகே பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ் வீட்டின் சுவற்றில் மோதி விபத்து
- திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.
- 2 பேர் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தச்சூர் கிராமத்தில் திட்டக்குடியிலிருந்து சின்னசேலம் நோக்கி சென்ற அரசு பஸ் இன்று காலை குறைந்த அளவிலான பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. தச்சூர் கிராமத்தின் உள்ளே செல்லும் பொழுது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.
மோதிய வேகத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து வீட்டின் முன்பு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 59), அவரது மனைவி லட்சுமி (52) ஆகிய 2 பேர் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்தனர். 2 பேரையும் கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் செல்வகுமார் தலையில் பலத்த காயமிருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் வீட்டின் சுவற்றில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.