நெய்தல் கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம்
- நாகை புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ள நெய்தல் கோடை விழா-2023 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசியதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் நெய்தல் கோடை விழா- 2023 நிகழ்ச்சி நாகை புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.
விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தோட்டக்கலை துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை, காவல்துறை (ம) போக்குவரத்து துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் திட்டம், மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றின் துறை சார்ந்த விழிப்புணர்வு அரங்கங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.