திருவிழா முடிந்தும் ஆழித்தேரை காண திரண்ட பொதுமக்கள்
- நேற்று காலை தியாகராஜருக்கு சிறப்பு நீராட்டு விழா நடைபெற்றது.
- 1.50 லட்சம் பேர் திரண்ட நிலையிலும் அசம்பாவிதங்களின்றி தேரோட்டம் நடந்தது.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என கூறப்படும் இத்தேரோட்ட நிகழ்ச்சியில் சுமார் 1.50 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆழித்தேர் கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி நேற்று முன்தினம் மாலை நிலையடிக்கு வந்து சேர்ந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று (2.4.23) காலை தியாகராஜருக்கு சிறப்பு நீராட்டு விழா நடைபெற்றது.
மாலையில் வில்லும் அம்புமாய் முப்புரம் எரித்த மூர்த்தி வீதி உலா மற்றும் பிச்சாண்டவர் புறப்பாடு நடைபெற்றது.
தேரோட்டம் முடிந்த பிறகு நேற்று மாலையும் ஏராளமான பொதுமக்கள் தேரை வந்து பார்த்து வணங்கி சென்றனர்.
மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் திரளாக வந்து தேரை பார்த்து பின்னர் தியாகராஜரை வழிபட்டு, அதனைத் தொடர்ந்து கடைகளில் இருந்த பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.
தேரோட்டத்தின் போது 1.50 லட்சம் பேர் திரண்ட நிலையிலும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேரோட்டம் அமைதியாக நடைபெற்றது.
. இந்த ஆண்டு 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் நகை திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.
இரண்டு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போய் உள்ளதாக புகாராகியுள்ளது.
மேலும் சிலரது செல்போன்கள் கூட்ட நெருக்கடியில் காணாமல் போய் இருப்பதும் தெரிய வந்தது.
இந்த ஓரிரு சம்பவங்களை தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெ றாமல் பாதுகாப்பான முறையில் தேரோட்டம் நடத்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.