மருதமலை கோவிலை சுற்றிய பகுதிகளை ஆன்மீக சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும்- அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. பேச்சு
- இந்த கோவிலின் அருகில் உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
- சட்டக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளதால் மாணவர்களும் பயன் அடைவர்.
கோவை,
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் சட்டசபையில் பேசியதாவது:-
கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. மருதமலை முருகன் கோவில் ஏழாவது படைவீடு என அழைக்கப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.எனவே பக்தர்களின் நலன் கருதி இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இந்த கோவிலின் அருகில் உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
அந்த இடத்தில் சுற்றுலா தலம் அமைத்தால் பக்தர்கள் மற்றும் மக்ககள் பயன் அடைவார்கள்.
இதுதவிர சட்டக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளதால் மாணவர்களும் பயன் அடைவர்.
எனவே சுற்றுலாத்துறை அமைச்சர் இந்து சமயம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் கருத்துக்களை பெற்று மருதமலையை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
அவருக்கு பதில் அளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
மருதமலை முருகன் கோவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், மருதமலை வனப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வனத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலைய துறையின் தடையின்மை சான்று மற்றும் கோவை கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு மற்றும் கருத்துரு பெறப்படுமாயின், சுற்றுலா துறை நிதிநிலைமைக்கு ஏற்ப பரீசலிக்கப்படும்.
மேலும் சுற்றுலாத்துறை எந்த ஓர் இடத்தையும் சுற்றுலா தலமாக அறிவிப்பதில்லை.
அந்த இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மற்றும் தேவைகள் அடிப்படையிலேயே பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா இடங்களை மேம்படுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் படி 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள்படி தொடர்பு டையத்துறை வாயிலாக அந்த இடம் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அந்த துறையின் மூலமாக தயார் செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் எங்கள் துறைக்கு அனுப்பட்டால், அதனை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று சுற்றுலா துறை நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.