உள்ளூர் செய்திகள்

அய்யனார் கோவில் தேர் திருவிழா

Published On 2023-05-03 07:12 GMT   |   Update On 2023-05-03 07:12 GMT
  • பெரிய நாகலூர் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தில் அய்யனார் கோயில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. தேர்திருவிழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி பூ போடுதல் விழாவும், 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் வகையறாக்கள் மண்டகப்படி வாரியாக சாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அய்யனார் கோயிலில் உள்ள விநாயகர், பூர்ண புஷ்கலாம்பிகா, அய்யனார், கருப்புசாமி, அரியமுத்து ஆண்டவர், செங்கமல ஆண்டவர் ஆகிய சுவாமிகளுக்கு பன்னீர், சந்தனம், பால், தயிர், இளநீர், திரவிய பொடி, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியின் போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து சுவாமிகள் தேரில் இருந்து தங்கு படையலும், 4ம் தேதி நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News