இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம்
- கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
- உயர்தரமான சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது
அரியலூர், ஏப்.18-
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பழைய கட்டிட வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சார்பில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவம் கோடைகால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.இந்த கோடைகால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, வயிற்றுப் புண், தோல்நோய்கள், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீரக கற்கள், மாதவிடாய் கோளாறுகள், பொடுகு, சைனஸ், மூலம், ஆஸ்த்துமா, பௌத்திரம், வெள்ளைப்படுதல், தைராய்டு பிரச்சனை, கருப்பை சினைப்பைக்கட்டிகள், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உயர்தரமான சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.முன்னதாக சித்த மருந்துகள் மற்றும் அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் சித்த மருந்தாக பயன்படுத்தப்படும் தாவர வகைகள் கண்காட்சியை பார்வையிட்டு அதன் சிறப்புகளை மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் விளக்கம் அளித்தார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.முத்துகிருஷ்ணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் குழந்தைவேலு, உதவி சித்தமருத்துவ அலுவலர் குமரேசன், உட்பட சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.