- தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது
- தொன்மையான தமிழை பாதுகாக்க வேண்டும் என்று நந்தலாலா தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,தொன்மையான தமிழில் எழுத, பேச மாணவர்கள் முன்வரவேண்டும்.
எங்கெங்கோ பிறந்த பலரும் தமிழை கற்றுக்கொண்டு தமிழுக்காக கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர், அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வாழ்ந்து தமிழை கற்று தேம்பாவனி எனும் நூலை எழுதினார். அதேபோல், திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதனால் திருக்குறளின் அருமை உலகறிந்தது.
இந்தியா பல்வேறு மாநிலங்களை கொண்டிருந்தாலும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல முக்கிய காரணங்கள் இலவச கல்வி, சமூகநீதியை கடைபிடித்தல், மொழிக்கொள்கையை பின்பற்றுதல் ஆகும்.மாணவர்கள் மொழியின் வளத்தை தெரிந்து கொள்ள இலங்கணங்களை கற்றறிய வேண்டும். எனவே, மாணவர்கள் பழமையான தமிழ் மொழியை நன்கு படிக்க வேண்டும். எழுத வேண்டும். தமிழை வளர்க்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவர் யாழனி , மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.