உள்ளூர் செய்திகள் (District)

மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அடித்துக் கொலை- கணவர் கைது

Published On 2023-04-21 06:31 GMT   |   Update On 2023-04-21 06:31 GMT
  • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யபட்டார்
  • போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 44). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் (40) என்பவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த விஜயகாந்த் மனோகரனை பலமுறை கண்டித்தார். ஆனால் அவர் தன்னை திருத்திக்கொள்ள வில்லை.இதற்கிடையே மனைவியும் திருந்தாததால் விஜயகாந்த் தனது மனைவியை பிரிந்தார்.

கணவர் கைவிட்ட நிலையில் விஜயகாந்தின் மனைவி தனியார் தொலைக்காட்சி தொடரில் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் மூலம் பிரிந்த தம்பதியினர் மீண்டும் சேர்ந்தனர். இதையடுத்து அவர்கள் சென்னையிலேயே வசித்து வந்தனர்.தற்போது பிரச்சினை தீர்ந்து விட்டதால், நாம் சொந்த ஊருக்கு செல்வோம் என்று கூறியதின் பேரில் மீண்டும் அவர்கள் எசனை கிராமத்திற்கு வந்தனர். இதனை அறிந்த மனோகரன் தனது வேலையை மீண்டும் காட்ட தொடங்கினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த அவர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். இருந்தபோதிலும் வீட்டில் தனியாக இருந்த விஜயகாந்த்தின் மனைவி கதவை திறக்கவில்லை. இதையடுத்து மனோகரன் அந்த வீட்டின் வாசலிலியே படுத்து தூங்கிவிட்டார். அதிகாலையில் இதைப்பார்த்த விஜயகாந்தின் தந்தை சின்னதுரை அவரை எழுப்பி, அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் இந்த சம்பவம் பற்றி அறிந்து கடும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் நேற்று மதியம் லாரி டயர் மாற்ற பயன்படுத்தும் லிவரை எடுத்து கொண்டு மனோகரனை தேடி உள்ளார். அப்போது மனோகரன் அதே கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் மதுபோதையில் படுத்து இருந்தார். அப்போது விஜயகாந்த் தான் வைத்து இருந்த லிவரால் அவரை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் விறைந்து சென்று மனோகரன் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விஜயகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News