உள்ளூர் செய்திகள்

அரியலூரில் களை இழந்த புத்தக திருவிழா-விற்பனையாளர்கள் கவலை

Published On 2022-06-30 10:18 GMT   |   Update On 2022-06-30 10:18 GMT
  • அரியலூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா களையிழந்து விட்டதால் அரங்குகள் அமைத்துள்ள உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்
  • கண்காட்சிக்கு வரும் நபர்களுக்கு நடமாடும் ஏடிஎம் மையம், சிறுதானிய உணவு அரங்கு உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன

அரியலூர்:

கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மக்கள், திருச்சி, சென்னை, தஞ்சாவூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழர் பண்பாட்டுப் பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் அரியலூரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அப்போதைய உதவி கலெக்டர் சந்திரேசகர சாகமூரி முயற்சியால், கலெக்டர் சரவணவேல்ராஜ் ஒத்துழைப்போடு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

இதனால், இந்தக் கண்காட்சி அரியலூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றறது. அப்போது மட்டும் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகின.

இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை.

தற்போது கொரோனா தொற்று குறைறய தொடங்கியதையடுத்து, 6-ம் ஆண்டு புத்தகக் கண்காட்சி கடந்த 24-ந்தேதி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறறது. ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் மிக, மிக குறைவாக உள்ளது.

இங்கு 83 அரங்குகளில், 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கண்காட்சிக்கு வரும் நபர்களுக்கு நடமாடும் ஏடிஎம் மையம், சிறுதானிய உணவு அரங்கு உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றறன. ஆனால், 5 நாள்களில் இதுவரை புத்தகக் கண்காட்சியைக் காண வந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கூட தாண்டவில்லை என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புத்தக விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், புத்தகக் கண்காட்சியில், நிகழாண்டு மக்களின் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. முதல் நாளில் புத்தகத்தின் விலை என்னவோ, அந்த விலைக்கே புத்தகம் விற்கப்பட்டது.

கடந்த 5 நாள்களாக புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், தற்போது ஒரு புத்தகம் 50 சதவீதம் தள்ளுபடியில் பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரங்கிற்கான நாள் வாடகை, தங்கும் ஊழியர்களுக்கான செலவுக்கு கூட புத்தகங்கள் விற்பனையாகாமல் உள்ளது என்றார்.

எனவே, எஞ்சியுள்ள நாட்களில் புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய, புத்தகக் காட்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு, விளம்பரம் செய்வது அவசியம் என புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News