மக்கள் தொடர்பு முகாமில் 76 பேருக்கு 4.33 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- மக்கள் தொடர்பு முகாமில் 76 பேருக்கு 4.33 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நமங்குணம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 71 பயனாளிகளுக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்து, அனைத்து துறைகள் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 270 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பிற நபர்கள் சுய தொழில் செய்து முன்னேறும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சுயதொழில் செய்ய விரும்புவோர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி கடன் பெறலாம். இதனை படித்த இளைஞர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் பெண்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கியுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக அவர், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா, ஊராட்சித் தலைவர் காட்டுராஜா, மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தனர்.