ஊட்டியில் அனுமதியின்றி கொடிக்கம்பம் நட முயற்சி-பா.ஜ.க. தலைவர் உள்பட பலர் கைது
- தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என அண்ணாமலை அறிவித்தார்.
- முக்கிய நிர்வாகிகளை கைது செய்து அங்கு உள்ள திருமண மண்படத்தில் அடைத்து வைத்தனர்.
ஊட்டி,
சென்னை பனையூரில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த பா.ஜ.க கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.
எனவே தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் கொடிகம்பங்கள் நட்டு கட்சிக்கொடியேற்றி வருகிறார்கள். அந்த வகையில் நீலகிரி. மாவட்டத்திலும் பா.ஜ.க சார்பில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொடியேற்றும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அந்த பகுதியில் பாஜக.மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டிருந்தனர். அங்கு அவர்கள் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஆனாலும் பா.ஜ.கவினர் தொடர்ந்து கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். எனவே அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். எனவே போலீசார் அனுமதியின்றி கொடிக்கம்பம் நட முயன்ற தாக பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்து அங்கு உள்ள திருமண மண்படத்தில் அடைத்து வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.