உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

Published On 2024-05-30 04:42 GMT   |   Update On 2024-05-30 04:42 GMT
  • வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
  • போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தியதும் கடத்துவதற்காக வேனில் வந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகுமூலம் பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க மாவட்ட கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே தருவைகுளம் கடற்கரை வழியாக பீடி இலை மூடைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை தருவைகுளம் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தருவைகுளம் கடற்கரைக்கு செல்லும் உப்பளப்பாதையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் லோடு ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 62 மூட்டை பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அதனை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தியதும் கடத்துவதற்காக வேனில் வந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர். கைப்பற்றப்பட்ட பீடி இலை இலைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News