மக்களுடன் முதல்வர்- உயரமான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் மனு கொடுக்காமல் திரும்பி சென்ற மாற்றுத்திறனாளிகள்
- தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் பலர் வந்திருந்தனர்.
- பெயரளவுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக மனுக்களை அளிக்க வந்த பொது மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவம்பட்டி கிராமத்தில் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவம்பட்டி ஊராட்சி, கண்ணன்டஅள்ளி ஊராட்சி, நாகம்பட்டி ஊராட்சி மற்றும் பொம்மே பள்ளி ஊராட்சி ஆகிய 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் பலர் வந்திருந்தனர்.
சுமார் 10 அடி உயரம் கொண்ட கட்டிடத்தில் படிக்கட்டில் ஏற முடியாமல் சில மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு மேலே ஏறிச் சென்று மனு கொடுத்தனர்.
மேலும் சில மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகள் ஏற முடியாமல் திணறியதால், அவர்கள் மனுக்களை அளிக்காமல் திரும்பி சென்றனர். மேலும் முதியவர்களும் பலர் படிகட்டுகள் ஏற முடியாமல் தாங்கள் கொண்டு வந்த மனுவை அளிக்காமல் திரும்பி சென்றனர். பெயரளவுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக மனுக்களை அளிக்க வந்த பொது மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, இதெல்லாம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என மெத்தனப்போக்கில் பதில் அளித்தார்.