மேட்டூர் அருகே பரப்பரப்பு- போலீஸ்காரரின் காதை கடித்து குதறிய குடிமகன்கள்
- குடிபோதையில் இருந்த 2 பேர் அரசு பஸ்சை மறித்து கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
- 2 பேரும் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆண்டி கரையை சேர்ந்தவர் இருசப்பன் (வயது 36). மேட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு காவல் பணிக்காக வீட்டில் இருந்து மேட்டார் சைக்கிளில் மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மங்கனூர் காலனி அருகே சென்றபோது குடிபோதையில் இருந்த 2 பேர் அரசு பஸ்சை மறித்து கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் பஸ்ஸில் இருந்த பெண்கள், குழந்தைகள், அச்சத்துடன் இருந்தனர். இதனைப் பார்த்த போலீஸ்காரர் இருசப்பன் அந்த நபர்களை தட்டி கேட்டு உள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனர். இதனால் முகத்திலும், காதிலும் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து இருசப்பன் கருமலை கூடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் போலீஸ்காரரை தாக்கியது தானம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் முத்துராஜ் (45), சிவசக்தி (53), என்பது தெரியவந்தது. இவர்கள் குடிபோதையில் தங்களை கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக அரசு பஸ்சை நிறுத்தி தகராறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிவசக்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடி வருகிறார்கள்.