வாக்கு எண்ணிக்கை எதிரொலி: சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி
- சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
- கோடை விடுமுறை சீசன் வியாபாரிகளுக்கு கை கொடுக்காமல் போனது.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியதால் கன்னியாகுமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந் தது.
இதற்கிடையில் கோடை காலத்தில் கடும் வெயில் கொளுத்தியதாலும், அதன்பின்னர் தொடர் மழை பெய்ததினாலும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடியும் தருவாயில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்ததால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
மேலும் விவேகானந்தர் மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து இடை இடையே நிறுத்தப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்ட பத்தையும் சுற்றுலா பயணிகள் சரியாக பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் இந்த 3 நாட்களும் லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு அறை கொடுக்கப்பட வில்லை. இதனால் ஏற்கனவே லாட்ஜ்களில் அறை புக்கிங் செய்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வராமல் அறைகளை காலி செய்தனர். இதனால் கன்னியாகுமரிக்கு கடந்த 30-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.
இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடை பெற்றதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.
இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் வியாபாரிகளுக்கு கை கொடுக்காமல் போனது. இதனால் கன்னியாகுமரி வியாபாரிகள் வியாபாரம் நடக்காத விரக்தியில் உள்ளனர்.