உள்ளூர் செய்திகள் (District)

கோடை மழை- 43 நாட்களுக்குப் பிறகு 100 டிகிரிக்கும் குறைவான வெயில்: பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2024-05-22 05:40 GMT   |   Update On 2024-05-22 05:40 GMT
  • வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலைகள் வீசத் தொடங்கியது.
  • வெப்பத்தின் தாக்கம் குறையாமல் மே 5-ம் தேதி 101.3 டிகிரி வெயில் பதிவானது.

தருமபுரி:

கோடை காலம் தொடங்கிய நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தினந்தோறும் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவே பதிவாகி வந்தது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

தொடர்ந்து வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலைகள் வீசத் தொடங்கியது. மேலும் 48 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் 108 டிகிரியாக வெப்பம் பதிவாகி இருந்தது. தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய கிணறுகள் வறண்டு விவசாய பயிர்கள் முற்றிலுமாக காய்ந்து கருகி வந்தது.

மேலும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்றி வந்தனர். இதனால் கோடை மழை கை கொடுக்குமா என்று,பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தினந்தோறும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மே 2-ம் தேதி வரலாறு காணாத அளவில் 108.5 டிகிரி வெப்பம் பதிவாகிய நிலையில், அன்று மாலையே பாலக்கோட்டில் 11 மில்லி மீட்டர் கோடை மழை பெய்தது.

அதனைத் தொடர்ந்து மே 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பொழிய தொடங்கியது. மே 4-ம் தேதி கத்திரி வெயில் எனும் அக்னி வெயில் பிறந்தது. அன்று 106.1 டிகிரி வெப்பம் பதிவானது. அன்று மாலையே மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பொழிய தொடங்கியது. இதனால் அன்று மாலையே வெப்பத்தின் அனல் காற்று குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் மே 5-ம் தேதி 101.3 டிகிரி வெயில் பதிவானது. மே 6-ம் தேதி வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து 104 டிகிரி வெயில் பதிவானது.

இதனைத் தொடர்ந்து மழையானது தொடர்ந்து 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பொழிந்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து தருமபுரி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமலேயே வீசி வந்த நிலையில் கத்திரி வெயில் எனும் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.

மே 7-ம் தேதி 100 டிகிரியில் இருந்து குறைந்து 97.1 டிகிரி வெயில் பதிவானது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் 2 நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம், மேலும் குறைந்து 88.7 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அன்று இரவு தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்கோடு, மாரண்ட ஹள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், காரிமங்கலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே பள்ளம் இருக்கின்ற இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் குறைந்து 89.6 டிகிரியாக பதிவாகி இருந்தது.

மேலும் தொடர்ந்து 43 நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெப்பத்தின் அளவு பதிவாகியிருந்த நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறைந்து நேற்று 88.8 டிகிரி குறைவாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோடை மழையால் வெப்பம் குறைந்து காணப்ப டுவதால் தருமபுரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News