ஊத்தங்கரை அருகே பன்றி வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
- மின்வேலிக்கு அருகேயுள்ள கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுப்பதற்காக கொக்கி போட்டுள்ளார்.
- பன்றியை பிடிக்க மின்வேலி அமைத்த வாலிபர் தானே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). இவர் சாமல்பட்டி அருகேயுள்ள மாந்தோப்பு பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாட இன்று சென்றுள்ளார்.
அங்கு பன்றிகளை பிடிப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அந்த மின்வேலிக்கு அருகேயுள்ள கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுப்பதற்காக கொக்கி போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி ரஞ்சித்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்றியை பிடிக்க மின்வேலி அமைத்த வாலிபர் தானே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.