உள்ளூர் செய்திகள் (District)

சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை

Published On 2024-06-20 15:14 GMT   |   Update On 2024-06-20 15:14 GMT
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலியாகினர்.
  • இதுகுறித்து மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியதாவது:

தமிழகஅரசும் , காவல்துறையும் விசாரணை நடத்தினால் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவராது. எனவே மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசும், போலீசும்தான் பொறுப்பேற்க வேண்டும். போலீசுக்கு தெரிந்தே பொதுமக்கள் புழங்கும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியாகினர். பள்ளி மற்றும் காவல்நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தி.மு.க.வினர் துணையுடன் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News