அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவிமையம் செயல்பட்டு வருகிறது.
நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது செல்போன், ஈ மெயில் ஐ.டி., ஆதார் எண், அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். சாதிச் சான்றிதழ் இல்லையெனில் பொதுப்பிரிவில் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம் மற்றும் இதரக் கட்டணம் ரூ.245 ஆகும், பயிற்சிக் கட்டணம் இல்லை.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் இதர அரசுச் சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.
நேரடி சேர்க்கை வருகிற 30-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் குறுகிய கால தொழிற்பயிற்சிக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னிரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.