கோவையில் ஐ.டி. ஊழியரை ஏமாற்றி ரூ.10¼ லட்சம் மோசடி
- அவர் முதலீடு செய்து நீண்ட நாட்களாக ஆகியும், அவருக்கு முதலீட்டு தொகையும், லாபமும் கிடைக்கவில்லை.
- கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள கஸ்தூரி பாய் வீதியை சேர்ந்தவர் சத்ய நாகிரா (வயது 28). ஐ.டி ஊழியர். கடந்த மாதம் 7-ந் தேதி இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது.
அதில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதனை பார்த்து ஆன்லைனில் முதலீடு செய்ய விரும்பிய சத்ய நாகிரா அதில் உள்ள லிங்கில் அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்தார்.
பின்னர் சத்ய நாகிராவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் எவ்வாறு பணத்தை முதலீடு செய்வது, லாப பணத்தை எப்படி பெறுவது என விளக்கி கூறினார். இதனை உண்மை என நம்பிய சத்ய நாகிரா அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் வெவ்வேறு பரிவர்த்தனைகளில் ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்து 920 பணத்தை முதலீடு செய்தார். ஆனால், அவர் முதலீடு செய்து நீண்ட நாட்களாக ஆகியும், அவருக்கு முதலீட்டு தொகையும், லாபமும் கிடைக்கவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த சத்ய நாகிரா இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி ஐ.டி. ஊழியரிடம் மோசடி செய்த மர்மநபர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.