உள்ளூர் செய்திகள் (District)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா - 26-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது

Published On 2022-09-13 06:45 GMT   |   Update On 2022-09-13 06:45 GMT
  • 1-ம் திருவிழாவான 26-ந்தேதி காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது
  • 9-ம் திருவிழாவான 4-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் அக்டோபர் (5-ந்தேதி) வரை ௧௦ நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

1-ம் திருவிழாவான 26-ந்தேதி காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும் காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11- 30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் இரவில் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 1-ம் திருவிழாவான 26-ந்தேதி முதல் 3-ம் திருவிழாவான 28-ந்தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்திலும் 4-ம் திருவிழாவான 29-ந்தேதி முதல் 6-ம் திருவிழாவான 1 -ந்தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி கோவிலைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

7- ம் திருவிழாவான 2-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்திலும் 8-ம் திருவிழாவான 3-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

9-ம் திருவிழாவான 4-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான5-ந் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து மதியம் 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், தங்க நாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்று அடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News