உள்ளூர் செய்திகள் (District)

வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது

Published On 2023-03-08 05:09 GMT   |   Update On 2023-03-08 05:09 GMT
  • ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் தகவல்
  • தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கும் வழங்கப்படுவதாக உறுதி

கரூர்,

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் நெசவு மற்றும் பின்னலாடை தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் சார்பில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களின் சார்பு நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் வெளி மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.இவர்கள் அனைவரும் ஜவுளி நிறுவனங்களினுடைய தங்கு விடுதியிலோ அல்லது தனிப்பட்ட முறையில் தங்கி தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஜவுளி நிறுவனங்களின் சார்பாகவும், அவர்களின் சார்பு நிறுவனங்களின் சார்பாகவும், சரியான முறையில் செய்து தரப்படுகிறது.வெளி மாநிலத்தில் இருந்து வருகை புரிந்திருக்க கூடிய தொழிலாளர்கள் தகுந்த உடல் நலத்துடனும், மன நலத்துடனும், குடும்ப நலத்துடனும் இருப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அனைத்து நிறுவனங்களும் செய்து வருகின்றன.வெளி மாநில தொழிலாளர்களும், தமிழ் நாட்டிலுள்ள தொழிலாளர்களும், சகோதர சகோதரிகளாக ஒரே குடும்பத்தில் இருப்பது போன்று, பழகி சிறந்த முறையில் தொழில் வளர்வதற்கு அவர்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.மேலும் வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற செய்தியை வெளியிடுவோரின் கருத்துக்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம் .வெளி மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் மிகச் சிறந்த முறையில் தமிழ் நாட்டை சார்ந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அதே முன்னுரிமையும் உரிமையையும் கொடுத்து சிறந்த முறையில் பாதுகாத்து வருகின்றோம். அவர்கள் பாதுகாப்புக்கு எந்த வித பங்கமும் இல்லை என்று உறுதியளிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News