- பெயிண்டர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- கொலையா போலீசார் விசாரணை
கரூர்:
கரூர் மாவட்டம், வெள்ளியணை தாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் அன்பு செல்வன் (வயது 40). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் காந்தி கிராமம், தமிழ்நகர் பகுதியில், கரூர் - திண்டுக்கல் ரெயில்வே வழித்தடத்தில் காயங்களுடன் அன்புசெல்வன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அன்புசெல்வன், ரெயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து வீசி சென்றிருப்பார்களா என்ற கோணத்தில்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அன்பு செல்வனுக்கு சாரதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.