உள்ளூர் செய்திகள் (District)

ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தையால் பரபரப்பு

Published On 2024-08-13 04:19 GMT   |   Update On 2024-08-13 04:19 GMT
  • சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
  • சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவண்ணா என்பவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். வனப்பகுதியை ஒட்டி இவரது தோட்டம் அமைந்துள்ளது.

நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சிவண்ணா தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை கடித்துக் கொன்றது. காலையில் எழுந்து சிவண்ணா பார்த்த போது ஆடு கொடூரமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தை கால் தடம் என்பதை உறுதி செய்தனர். இதனைக் கேட்டு விவசாயிகள் பீதி அடைந்தனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News