உள்ளூர் செய்திகள் (District)

வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்

Published On 2022-12-26 07:47 GMT   |   Update On 2022-12-26 07:47 GMT
  • மதுரையில் இன்று அதிகாலை விபத்தில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் முதல் கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.

மதுரை

மதுரை மேலமாசிவீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் மினி வேனில் கும்பகோணத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். வேனில் 10 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 24 பேர் பயணம் செய்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரை அருகே உள்ள பாண்டிக்கோவில் ரிங் ரோட்டில் மினி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அதே வேகத்தில் சாலை தடுப்பில் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது.

வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். நள்ளிரவு என்பதால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை. அந்த வழியாக வாகனத்தில் வந்த சிலர் மினி வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 16 பேரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்த தால் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News