பஞ்சு மெத்தை பாரம் ஏற்றி வந்த மினிலாரி தீப்பிடித்து எரிந்து நாசம்
- வண்டியை ஓட்டி வந்த டிரைவர் மினி லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
- மினிலாரியில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மெத்தை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி புறப்பட்டு வந்தது. இந்த தருமபுரி அருகே மணியக்காரன் கொட்டாய் கிராமத்தின் அருகில் இன்று அதிகாலை வந்தபோது திடீரென அந்த மினிலாரியில் தீ பற்றி எரிந்தது. உடனே வண்டியை ஓட்டி வந்த டிரைவர் மினி லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
இந்த தீ விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மினிலாரியில் பிடித்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். வாகனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதம் அடைந்துவிட்டது.
இதுகுறித்து பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில் பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியை அடுத்த தித்தியோப்பனஅள்ளி திகிலோடு கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் அய்யாசாமி (வயது 30) என்பவர் மினிலாரியை ஓட்டி வந்ததும், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மினிலாரியில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.