உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் மாயமான பிளஸ்-2 மாணவி சென்னையில் வாலிபருடன் மீட்பு

Published On 2023-07-17 09:34 GMT   |   Update On 2023-07-17 09:34 GMT
  • கடந்த 12-ந் தேதி இரவு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்
  • சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை,

கோவையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 12-ந் தேதி இரவு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரை அவரது தாய் அக்கம்பக்கத்தினர் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மாணவியின் தாய் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாணவி சென்னையில் இருப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் சென்னைக்கு விரைந்து சென்றனர். சென்னை வண்டலூர் பஸ் நிறுத்தத்தில் மாயமான சிறுமி வாலிபர் ஒருவருடன் நின்றிருந்தார்.

இதையடுத்து போலீசார் சிறுமியையும், வாலிபரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

மேலும் இந்த வழக்கை மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News