பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
- ரெயில் நிலையத்தில் உள்ள குப்பைகள், செடி, கொடிகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.
- முகாமில் அரிமா சங்க நிர்வாகிகள், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் மற்றும் மாணவிகள் 40 பேர் குழுவாக சேர்ந்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் உள்ள குப்பைகள் மற்றும் தேவையற்று வளர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றினர். இருக்கை களை சீர்படுத்தி சுத்தப்படுத்தினர். பாவூர்சத்திரம் ரெயில்வே நிலையத்தின் நிலைய அதிகாரிகள் ஒத்துழைப்போடு அரிமா சங்கம், ஊராட்சி தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஐன்ஸ்டீன் கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஐன்ஸ்டீன் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆலடி எழில்வாணன்,லயன்ஸ் கிளப் கே.ஆர்.பி.இளங்கோ, லட்சுமி சேகர், பரமசிவன், தளிர் தங்கராஜ், பாண்டியராஜா ஆகியோர் செய்திருந்தனர்.