உள்ளூர் செய்திகள் (District)

பாம்பு பிடிக்க சென்ற வன ஆர்வலர்களை தாக்கிய 20 பேர் கும்பல்: செல்போனை உடைத்து நொறுக்கினர்

Published On 2023-04-20 07:12 GMT   |   Update On 2023-04-20 07:32 GMT
  • நேற்று இரவு கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் தங்களது வீட்டில் பாம்பு இருப்பதாக நள்ளிரவு தகவல் தெரிவித்துள்ளார்.
  • அவர்கள் செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கியதோடு செல்லா வைத்திருந்த செல்போனை உடைத்து நொறுக்கினர்

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் செல்லா (வயது 30). வன ஆர்வலர். இவரது உதவியாளர் செல்லங்குப்பம் சேர்ந்த அஜய் (வயது 23). இவர்கள் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாம்பு பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் தங்களது வீட்டில் பாம்பு இருப்பதாக நள்ளிரவு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செல்லா மற்றும் அவரது உதவியாளர் அஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சான்றோர் பாளையம் பகுதியில் சென்றனர். பின்னர் பாம்பு இருப்பதாக தகவல் கொடுத்த நபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் செல்லா மற்றும் அஜய்யிடம் நீங்கள் யார்? எதற்காக நிற்கிறீர்கள்? என கேட்டார்.

அப்போது பாம்பு பிடிப்பதற்காக இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர் திடீரென்று செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கினார். மேலும் அதே பகுதியை சேர்ந்த தனது ஆதரவாளர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதனை தொடர்ந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட கும்பல் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கியதோடு செல்லா வைத்திருந்த செல்போனை கீழே போட்டு உடைத்து நொறுக்கினர். மேலும் செல்லாவை தாக்கியபோது அவர் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்த நிலையில் அதனை பத்திரமாக செல்ல எடுத்துக்கொண்டு அங்கிருந்து உயிர் பிழைத்து தப்பித்து வந்தனர். இதில் காயமடைந்த செல்லா மற்றும் அஜய் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே வன ஆர்வலர் செல்லா மற்றும் அவரது உதவியாளரை ஒரு கும்பல் தாக்கி செல்போைன அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News