தருமபுரி உழவர் சந்தை, இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உழவர் சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
- கேதார கவுரியம்மனுக்கு விரதம் இருந்தவர்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்கவும், விரதம் கடைபிடிக்காதவர்கள் இறைச்சி கடைகளிலும் கறி வாங்குவதற்காகவும் குவிந்தனர்.
தருமபுரி:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகையான நேற்று அதிகாலையிலே பொதுமக்கள் எண்ணை தேய்து குளித்து புத்தாடைகள், நகைகள் அணிந்து பட்டாசு வெடித்தும், வீடுகளில் தீபம் ஏற்றியும் தீபாவளியை கொண்டாடினார்கள். நேற்று முன்தினம் மாலை, 3 மணி முதல் அமாவாசை தொடங்கியதை அடுத்து கேதாரகவுரி விரதம் இருப்பவர்களில் நேற்று மாலை, 3 மணிக்கு மேல் கேதாரகவுரி விரதம் மேற்கொண்டனர்.
இதற்காக நேற்று காலை தர்மபுரி உழவர் சந்தை மற்றும் சந்தைபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகள், இலை, விரத பொருட்கள் வாங்க அதிகளவில் குவிந்தனர். கேதார கவுரி விரதம் மேற்கொள்ளாதவர்கள், அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் ஆடு, கோழி கறிகள் மற்றும் மீன் உள்ளிட்டவை வாங்க அதிகளவில் குவிந்தனர். இதனால், காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதியம், 12 மணி முதல் மதுபானம் வாங்குபவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது.